வெளிநாட்டில் இருந்து திருச்சி வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்றும் தங்கக் கடத்தல் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு அயல் நாடுகளுக்கும், இங்கிருந்து டெல்லி மும்பை சென்னை என உள்நாடுகளுக்கும் பயணிகள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அரசுக்கு வருவாய் இழப்பு செய்யும் நோக்கில் பல்வேறு நாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது, தங்கம், மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை மறைத்து கொண்டு வருவது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாக தான் இருக்கின்றது.
அந்த வகையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியை சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
50 லட்சத்து 8 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள 797.500 கிராம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று இந்தக் கடத்தலுக்கும் அவருக்கும் மன தொடர்பு மற்றும் யார் மூலம் கொண்டுவரப்பட்டது என்பது பற்றி எல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“