"மருத்துவர் அய்யா என் மீது கோபம் இருந்தால், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்” என திருவள்ளூரில் நடந்த பொதுக் குழுக்கூட்ட மேடையில் தனது தந்தை ராமதாஸிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று கூறப்பட்டது.
அண்மையில் ராமதாஸ்
சென்னை வந்த போதும் அன்புமணியை சந்திக்காமல் சென்றார். இதைத் தொடர்ந்து மூச்சுக்காற்று இருக்கும் வரை பா.ம.க-வில் நான் தான் தலைவராக இருப்பேன் என்று தெரிவித்தார். மேலும், அன்புமணி தரப்பு ஆதரவாளர்களைப் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே மணவாளன் நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "அண்ணா, பெரியார், கருணாநிதி வாரிசு என வசனம் பேசும் கட்சி திராவிட மாடல் திமுக கட்சி. சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்றால் என்ன எனத் தெரியாதவர்
தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின். இன்னும் பெரியார் பேரன் என ஏமாற்றுகிறார்" என்று கூட்டம் சாற்றினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "பாமகவினர் கிராமங்களுக்குச் செல்லுங்கள். பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிதான் 2026-ல் ஆட்சி அமைக்கும்" என்று அவர் தெரிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இன்று தந்தையர் தினம். மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துக்கள். ஐயா 100 வருடம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்... என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் ஐயா அவர்கள் மன்னிக்க வேண்டும்... தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்று பெரிதல்ல ...மகனின் கடமையாக உங்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வது எனது கடமை..." என்று தெரிவித்தார்.
"ஐயா அவர்கள் வருத்தப்படாதீர்கள் கோபப்படாதீர்கள் நீங்கள் உருவாக்கிய கட்சி இது. இன்று நீங்கள் தேசிய தலைவர்... பிரதமர் மோடி வந்து சொன்ன வார்த்தைகள் எல்லாம் நான் மறக்க முடியாது; இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என மோடி பாராட்டி இருந்தார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.