2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இ.பி.எஸ் இருக்கும் இடத்தில் மதவாதத்திற்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகாசியில் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (10.06.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க கூட்டணியை பார்த்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க அமைத்துள்ள பூத் கமிட்டி போல் வேறு எந்த கட்சியும் அமைக்கவில்லை. தி.மு.க இதுவரை பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தியது இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.க நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர். திமுகவினரே உள்ளே பொங்கிக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “2026-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? இ.பி.எஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும்” என்று கூறினார்.
மேலும், தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, “அ.தி.மு.க-வை எதிர்க்க தி.மு.க-விற்கு தைரியமும், துணிச்சலும் கிடையாது. அ.தி.மு.க-விற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது” என்று கூறினார்.
இ.பி.எஸ்-ன் மதச்சார்பின்மை குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, “இ.பி.எஸ் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு அவர் இருக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.