/indian-express-tamil/media/media_files/2025/08/13/admk-maith-2025-08-13-11-04-50.jpg)
'அ.தி.மு.க.வின் போக்கு சரியாக இல்லை'... அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயன் பேட்டி
தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்பி மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். அதிமுக சார்பில் 2002 முதல் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இன்று இணைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணங்களையும், தி.மு.க. மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் மீதான தனது நம்பிக்கையையும் பற்றி கூறினார். அ.தி.மு.க.வின் தற்போதைய போக்கு சரியானதாக இல்லை என்று குற்றம்சாட்டிய மைத்ரேயன், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தது, கட்சியின் கட்டுப்பாடு டெல்லியில் இருப்பதை உணர்த்துகிறது என்றார். எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டிருக்கிறார், என்னதான் உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்து ஆகாது என்றும் விமர்சித்தார்.
மைத்ரேயன் அரசியல் பயணம்
புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன், பா.ஜ.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1995 முதல் 1997 வரை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்துள்ளார். பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் 1999-ல் இணைந்தார். அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்தபோது, ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதையடுத்து. 2023-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், பின்னர் 2024-ல் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது மைத்ரேயன் அ.தி.மு.க.வில் இருந்தும் விலகி தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
ஏற்கனவே அன்வர் ராஜா இணைந்த நிலையில், இன்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, தி.மு.க.வில் இணைந்த அடுத்த நொடியே அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.