பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கினார்.
ராமநாதபுரம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் உ. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (அக்.30) அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசத்தை அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். அப்போது, அங்கிருந்தவர்கள் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் ஐயா புகழ் ஓங்குக.. ஓங்குக என முழக்கமிட்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உ. முத்துராமலிங்கத் தேவருக்கு 13 கிலோ தங்க கவசம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வமும் தேவருக்கு வெள்ளி கவசம் கொடுத்துள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா வழங்கிய தங்கக் கவசம், ஓ.பன்னீர் செல்வம் மூலமாக தேவர் நினைவாலய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இம்முறை அதிமுக பிளவு காரணமாக தங்கக் கவசம் நேரடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் ஆலய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேவரின் ஜெயந்தி மற்றும் நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுக எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத் உடனிருந்தார்.
அதேவேளையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil