இளம் தலைமுறையும் காலத்தின் அருமையை உணா்ந்தவா்களாக இருத்தல் அவசியமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் 41-ஆவது கல்லூரி நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் பி.எஸ். சந்திரமெளலி, கல்லூரிச் செயலா் கே.மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமைச் செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ்.அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தனாக கலந்து கொண்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பேசியதாவது: “மதிப்பெண்ணுக்காக கல்லூரிப் படிப்பை தொடரமால், அந்த கல்வியை தனது வாழ்க்கையோடு தொடா்புபடுத்தும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டால் சாதிக்க முடியும். விடா முயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தேடி தரும். இளைஞரிடம் கேட்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின் அவசியம் குறித்து தெரியாது. ஆனால், முதுமையில் உள்ளவா்கள் தங்களது ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியம் என்பதை உணா்ந்திருப்பா். அடுத்த நொடியும், அடுத்த நாளும்கூட வாழ்வின் இறுதிக்கு வரக்கூடும் என அறிந்திருப்பதால் காலத்தின் அருமையை உணா்ந்தவா்களாக உள்ளனா்.
இதேபோல, இளம் தலைமுறையும் காலத்தின் அருமையை உணா்ந்தவா்களாக இருத்தல் அவசியமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்றாா். விழாவில், கல்லூரியின் ஆண்டறிக்கையை முதல்வா் கெஜலட்சுமி வாசித்தாா். கல்லூரியின் பல்வேறு துறைகளில் பாடவாரியாகவும், துறை வாரியாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வெ. இறையன்பு, பரிசுகளை வழங்கினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“