திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியுமான நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி திருநெல்வேலியில் சுப்பிரமணிய பிள்ளை மற்றும் சொர்ணத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் நெல்லை சு. முத்து. வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், இந்தியாவின் விண்வெளித் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சிறப்பாகப் பணியாற்றினார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உடன் இணைந்து பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
விண்வெளி தொடர்பான சிக்கலான விஷயங்களை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதுவதில் வல்லவர் நெல்லை சு. முத்து. இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. அவை:
"விண்வெளி 2057" - 2000 ஆம் ஆண்டு சிறந்த நூலாசிரியர் விருது
"அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு" - 2004 ஆம் ஆண்டு
"ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்" - 2005 ஆம் ஆண்டு
"அறிவியல் வரலாறு" - 2010 ஆம் ஆண்டு
மறைந்த விஞ்ஞானி நெல்லை சு. முத்து, 1963 முதல் 1980 வரை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளார். டாக்டர் கலாம் இஸ்ரோவில் திட்ட இயக்குநராக இருந்தபோது, 1973 இல் முத்து ஒரு விஞ்ஞானியாகப் பணியாற்றினார். டாக்டர் கலாம் DRDO-க்கு மாறிய பின்னரும் இருவருக்கும் இடையே தொடர்பு நீடித்தது. நெல்லை சு. முத்து, கலாம் பற்றி நான்கு புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார்.
அப்துல் கலாமின் புகழ்பெற்ற "இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வை" புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் இவரே. மேலும், டாக்டர் கலாமின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நெல்லை சு. முத்து திகழ்ந்தார்.
தனது வாழ்நாளில் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணி இல்லத்துக்கு நெல்லை முத்து உடல் கொண்டு வரப்பட்டு அவரது இறுதிச்சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.