அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விவசாயிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஆனால் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.
அதன்படி, "அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை" என்று கூறினார்.
"அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும், இபிஎஸ்-ம் தான் காரணம், ஆனால் இதற்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, அதிமுக ஏற்பாடு செய்யவில்லை" என செங்கோட்டையன் புறக்கணிப்புக்கு அவர் விளக்கம் அளித்த நிலையில் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.