/indian-express-tamil/media/media_files/2025/06/03/TlB34HQ3b2F1p8Kmt3CS.jpg)
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டெல்டா தழுவிய மாபெரும் பேரணி, முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமையேற்ற பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
தனது தந்தையார் கலைஞர் கொண்டு வந்த நேரடி நெல் கொள்முதலை தனியார்க்கு தாரை வார்த்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவிட்டது. விவசாயிகளுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் கைவிட்டு வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக துணை போய் கலைஞருக்கு துரோகம் செய்கிறது.
பச்சை துண்டை போட்டுக் கொண்டு டெல்டாக்காரன் என்று தன்னை பாராட்டிக் கொள்ளும் முதலமைச்சர் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தரமறுக்கிறார்.
நடப்பாண்டு தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பருத்தி எள் பயறு உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்தனர். கோடை மழையால் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டது. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர மறுத்து எட்டு கிராமங்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள்.
வேளாண்துறை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து செயல்படுகிறது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களோடு கைகோர்த்து விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக செயல்படுகிறது.
மத்திய அரசு வட்டி கட்டி வங்கிகளில் கடனை புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையை நடப்பாண்டு கைவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆகி கருப்பு பட்டியில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வட்டி செலுத்தி கடனை புதுப்பித்துக் கொள்ள நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
வங்கிக் கடன் பெறுவதற்கு நகைக்கான ரசீது அத்தாட்சி கொடுத்தால் தான் கடன் பெற முடியும் என்கிற நிலையை உருவாக்குகிறார்கள். இதனால் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது .
காவிரி டெல்டாவில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு அனுமதி கொடுத்துள்ளதாக வந்திருக்கிற செய்தியை அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சென்ற ஆண்டு நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்து இதுவரையிலும் இழப்பீடு பெற முடியவில்லை. நான்காண்டு காலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு கொடுக்க மறுக்கிறது. பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் நம்பிக்கை இழந்த குஜராத் அரசு தனி காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ₹15,000 ஊக்க நிதியாக முழு மானியத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும். நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். இதனை கொண்டு வந்த கலைஞருக்கு ஸ்டாலின் அரசு துரோகம் செய்கிறது.
உடனடியாக நேரடி நெல் கொள்முதலை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் 300 பெண் விவசாயிகள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாநில அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர், மாநிலத் துணைத் தலைவர் பயரி எம் கிருஷ்ண மணி, தஞ்சை மண்டல தலைவர் வேட்டங்குடி சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், தமிழக மலைவாழ் விவசாயிகள் சங்பொதுச் செயலாளர் ஏற்காடு எம் ராமர், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன், துணைத் தலைவர் எம் கோவிந்தராஜ், துணைச் செயலாளர் முகேஷ், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், தலைவர் முருகேசன், நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன், மாவட்ட செயலாளர் கமல்ராமன்,கௌரவ தலைவர் கருணைநாதன், துணைச் செயலாளர் திருமருகள் சேகர், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் செயலாளர் பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன்உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.