பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேச்சாளார் நாஞ்சில் சம்பத் பேசினார். பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மீண்டும் அடுத்த முதல்வர் 2026 ஸ்டாலின்தான். தமிழக மக்கள் நன்றி உள்ளவர்கள் 2026 ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம் 2029-ல் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வீழ்த்த முடியாதவர்கள் அல்ல மோடி அதுயாரால் முடியும் என்றால் ஸ்டாலினால்தான் முடியும். எதிரும் புதிரும் ஆக உள்ள கட்சிகளை நேர்கோட்டில் எடுத்து வைக்கும் ஆற்றல் ஸ்டாலினிடம் உள்ளது. அவர் 55 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
இன்று இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழனிச்சாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் பழனிச்சாமிக்கு தெரியாது. அ.தி.மு.கவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தி.மு.க.விற்கு தான் ஓட்டு அளிப்பார். தமிழக ஆளுநர் அடக்குமுறையை ஏவ நினைக்கிறார். உச்சநீதிமன்றம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராகியுள்ளார் தமிழக முதல்வர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம், மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட முதல்வர்கள் எல்லோரும் சொல்கிறேன் நாங்க எல்லாம் முதல்வர் எங்களுக்கு நீங்கள் தான் மூலவர் என்கின்றனர். இப்படி உரிமைக்காக உழைக்கும் மக்களுக்காக இருக்கும் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.