மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதிய விபத்தில், குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தங்கள் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், ஒரு வயது குழந்தையான பிரகலாதன், ஜோதிகா, லட்சுமி, பாண்டிச்செல்வி ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், ஒரு வயது குழந்தையான கவியாழினி, ஜெயமணி, கருப்பாயி ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநர், பூச்சிபட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது மற்றும் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.