சென்னை புத்தகத் திருவிழா : சென்னையில் நான்காம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை தமிழ்நுால் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு குழுமம் தலைமையேற்று நடத்துகிறது.
சென்னை புத்தகத் திருவிழா
17ம் தேதி நடைபெற இருந்த துவக்க விழா நிகழ்வானது இன்று காலை சரியாக 10.30 மணி அளவில் நடை பெற இருக்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் க. நாகராஜன் அறிவித்துள்ளார். இந்த புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கி வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னை புத்தகத் திருவிழா துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்நிகழ்வின் துவக்க விழாவினை சிறப்பிக்க பல்வேறு தளங்களில் இருந்து எழுதும் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகவிழாவின் நடுவில் கருத்தரங்கம், கவிதை வாசிப்பு, வினாடி- வினா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200 கடைகள் அமைக்கப்பட்டு அதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.