பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 20ம் தேதி முதல் அது நடைமுறைக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்குச் செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோயிலுக்குச் செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும் அதிக பட்ச கட்டணம் 1038 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் அறிவித்திருக்கின்றன. அதைவிட முக்கியமாக, மாணவர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பின்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடரும். இதுவரை 22,66,483 இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும். அதிலும், பழைய டிக்கெட் கட்டண அடிப்படையிலேயே வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Details Awaited...