’நாங்க ஆட்சிக்கு வந்தாச்சுனா.. என்னென்ன சொன்னோம்.. மக்களே கஷ்டப்படாமல் 4 மணிவரை வேலை செய்யுங்கள். அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்க என்று சொன்னோம். இப்போ அதேமாதிரி போய் வறீங்களா?. இப்போது ரோடு போட்டு பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப்போகப்போறீங்க’ என்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
’பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்,’ இவ்வாறு அண்ணாமலை அதில் தெரிவித்திருக்கிறார்.