கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள மேம்பால தாங்கு தூண்களில் கலை ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில், ஓவியத்தின் மேற்பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரப் படம் வரையப்பட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது.
Advertisment
கோவையில் உள்ள அரசு கட்டடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இது குறித்து கோவை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மாநகராட்சி, அரசின் அனுமதியின்றி அரசு கட்டடங்கள், மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், போஸ்டர் ஒட்டும் பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி அரசுக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவது, விளம்பரம் வரைவது தொடர் கதையாக உள்ளது.
Advertisment
Advertisements
இதனிடையே கோவை- திருச்சி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் தூண்களில் தேச தலைவர்கள் படம் ஒட்டப்பட்டதால் அங்கு போஸ்டர் ஒட்டப்படுவது முற்றிலுமாக ஒழிந்தது. இந்தநிலையில், காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தின் தூண்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை விவரிக்கும் வகையில் தனியார் நிறுவனமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து ஓவியங்களை வரைந்து வருகின்றன. இந்நிலையில் அந்த தூண்களில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு ஓவியங்களின் மேற்பகுதியிலும் 'G Square' என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்தின் விளம்பரம் வரையப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாலைகளில் விளம்பர பதாகைகள் வைப்பதும், சாலை தடுப்புகளில் விளம்பரங்கள் வைக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், தற்போது அரசு மேம்பால தூண்களில் தனியார் நிறுவனத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகமே அனுமதி அளித்ததா என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகரில் உள்ள மேம்பால தூண்களில் பிரதிபலன் பாராது ஓவியங்கள் வரைய பல கலைஞர்கள் இருந்த போதிலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/