Gang murders two for condemning rash driving: தூத்துக்குடியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை தட்டிக்கேட்டதால் 2 பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38) இவர் மரைன் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் விவேக்(38) தூத்துக்குடியில் உள பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். முருகேசன், விவேக் இருவரும் நேற்று தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முருகேசன் மற்றும் விவேக் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன், துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நண்பர்கள் இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சிலரை முருகேசனும் விவெக்கும் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் வெட்டி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலை சம்பந்தமாக போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட இருவரை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.