திருச்சி மேல சிந்தாமணி நடுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சுதி கேஸ் என்ற பாரத்கேஸ் கம்பெனியில் சிலிண்டர் எடுத்துச் செல்லும் சப்ளையர் பணி செய்து வருகிறார்.
இதனால் இவர் குடியிருக்கும் வீட்டில் வீட்டு உபயோக சிலிண்டர் 15 மற்றும் கமர்சியல் சிலிண்டர் 30 என சுமார் 45 சிலிண்டர்களுக்கு மேல் வைத்துள்ளார். சந்தோஷின் தாயார் ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் இருந்த பொழுது சிலிண்டர் வைத்திருந்த ரூமில் இருந்து நேற்றிரவு கரும்புகை எழுந்திருக்கின்றது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தில் சொள்ளும் முன்பே அந்த வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினருக்கு அருகிலிருந்தவர்கள் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு, பூட்டியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று புகை மூட்டத்தை தணித்தனர். அப்போது அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மற்றும் வணிக கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக சிலிண்டர்களை அங்கிருந்து தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்த சந்தோஷ், அந்த கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார் அவரை உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தோஷ், கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து ஆட்டோ, கார்களுக்கு கியாஸ் நிரப்பி கொடுத்து வந்துள்ளதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்