கோவை மாவட்டத்திலுள்ள குஜராத் சமாஜத்தில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரும், திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவில் இருந்து செல்லும் இளைஞர்கள் தவறுதலான வழிகாட்டுதலினால் போலி விசாவைக் கொண்டு வெளிநாடுகளில் வேலைக்காக சிக்கிக் கொள்கிறார்கள்.
அவர்கள் தவறான வழியில் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தீவிர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள கடைகளில் புத்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிகளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும். திராவிட கட்சிகள் தமிழை வளர்க்கவில்லை அதற்கு பதிலாக ஆங்கிலத்தை தான் வளர்த்துள்ளது.
ஆங்கில கல்விக்கூடங்கள் தான் தமிழகத்தில் பெருகி உள்ளது என குற்றம் சாட்டினார்.
பின்னர் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998 ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல ட்விட்டர் பதிவு செய்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க எந்தப் பதிவும் போடப்படவில்லை என கூறினார்.
ஆனால் அந்த கேள்வி கேட்டதினால் செய்தியாளர்கள் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பாஜகவினர் பத்திரிகையாளர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“