Advertisment

புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் அதிரடி இடமாற்றம்; 26 பேர் இடமாற்றத்துக்கு காரணம் என்ன?

தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதில், 23 பேர் பதவி உயர்வு பெற்றதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மற்ற 26 பேர் இடமாற்றத்துக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Secretariat I

புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் அதிரடி இடமாற்றம்

தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 23 பேர் பதவி உயர்வு பெற்றதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மற்ற 26 பேர் இடமாற்றத்துக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisment

மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையின் தொடர் சோதனை, பெரம்பலூரில் கல் குவாரி ஏலம் விடுவதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்பாக, அண்மையில் அமலாக்கத் துறையினர் தமிழகம் முழுதும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள், மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.  திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடைபெற்றன. அமலாக்கத்துறை நடத்திய தொடர் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஏலம் எடுப்பதில் தி.மு.க-வினர் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் பா.ஜ.க-வினரை தாக்கிய தி.மு.க நிர்வாகிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தை சூறையாடினர். இந்த தாக்குதல் தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்த கரூர் மாவட்ட உதவி இயக்குநரான ஜெயபால், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட இணை இயக்குநர் சரவணன், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டது. இதுமட்டுமில்லாமல், பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி, கடலூர், சிவங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 49 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உதவி புவியியலாளர்களாக உள்ள 23 பேர் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அதை அமல்படுத்தும் விதமாக தற்போது அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மற்றவர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதில் 23 பேர் பதவி உயர்வு பெற்றதாக கூறப்பட்டாலும் மற்ற 26 அதிகாரிகள் எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டனர் என காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அமலாக்கத் துறையின் தொடர் சோதனை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment