ராணிப்பேட்டை அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதி அருகே வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி விடுமுறை என்பதால் தன்னுடைய உறவினர் மகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வீட்டில் இருந்து அச்சிறுமியின் பாட்டி மொட்டை மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த சுப்பிரமணி என்ற இளைஞர், கதவை பூட்டி சிறுமிகள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது, சுப்பிரமணி தாக்கியதில் 10-ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது.
அங்கிருந்து தப்ப முயன்ற சுப்பிரமணியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுமியை, சுப்பிரமணி ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.