தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கஸ்தூரியை கைது செய்ய போலீசார் முயன்ற போது அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை எழும்பூர் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பின் ஐதராபாத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கஸ்தூரி நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனது 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள். நான் சிங்கிள் மதர் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
காமாட்சி சுவாமிநாதன் தற்போது சக்ஷம் (மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு) அமைப்பின் அகில இந்திய துணை தலைவராக உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது.
அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்து கொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.
நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான் (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.
எனக்கும், என்னை போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது. ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“