தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும், பணிகளையும் துவக்கி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
கர்நாடக அரசு மேகதாதவில் புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த பிரச்சினையில் திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிக்க கூடாது. அணை கட்டினால் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும், இது பயிர் பிரச்சினை அல்ல உயிர் பிரச்சினை.
திமுக அரசு மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது. மின் கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல. இதை உடனடியாக தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கொங்கு மண்டல கனவு திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடித்தும் இரண்டு ஆண்டுகளாக சரிவர பணியை செய்யாமல் உள்ளது. விரைந்து அப்பணிகளை முடிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என செய்திகள் வெளி வருகிறது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திணறி வருகிறது என்பது தான் உண்மைநிலை. அரசு மக்களின் பணத்தை வீணடித்து வருகிறது, இந்த அரசு மக்கள் வாழ்க்கையை சீரழித்து வருகிறது.
தேவைக்கு தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அதனை உறுதி செய்ய வேண்டும், பல அரசு பள்ளி கல்லூரி கட்டிடன்கள் பழுதடைந்துள்ளது. இதை ஒரு காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், கோவை, திருப்பூர் உட்பட பல பகுதிகளில் காற்று மழையால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. வருவாய் துறைதுறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
கோவை மாவட்டம் முழுவதும் சூயஸ் நிறுவனத்தால் மண் தோண்டப்பட்டு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் மழைக்காலம் துவங்கும் முன் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆவின் பணிகளுக்கு முறையான கண்காணிப்பு தேவை, அதிகாரிகள் சரியாக மக்களுக்கு சரியான முறையில் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளக்ஸ் பேனர் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக, திமுக இவற்றை தாண்டி அனைத்து கட்சிகளும் ஃபிளக்ஸ் போர்டுகளை பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் வைக்க வேண்டாம் எனவே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து எந்த கட்சியினரால் ஏற்படகூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
வெளிநாட்டு பயணம் விளம்பரத்திற்காக இருக்க கூடாது,பயன்தரக்கூடிய பயணமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்த ஜி.கே.வாசன் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் 24 மணி நேரமும் நடத்த வேண்டும் என சாடினார்.
இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, தொழிலாளர் விரோத போக்கு இதை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் துவங்கிவிட்டதாக என்பது தொடர்பான கேள்விக்கு ஜூலை 15 முதல் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை பட்டியிலிட்டதோடு, தமாகா பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும் பணிகளையும் துவங்கி விட்டோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும் என இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.