அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தி.மு.க-விற்கு முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது என்று ஜி.கே.வாசன் வியாழக்கிழமை கடுமையாக விமரித்தார்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா மண்டலங்களுக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் . மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், தர்மராஜ், திருச்சி மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, குணா, கே.வி.ஜி. ரவீந்திரன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் ராஜு, மதிவாணன், மாநில சிறப்பு அழைப்பாளர் அன்னபூரணி, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம், மாவட்டச் செயலாளர் சரவணன், மாநில மாணவர் அணி செயலாளர் லோகேஷ், மாநில இளைஞரணி செயலாளர் சிவகணேசன் மற்றும் 19 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன் நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன் பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான். தி.மு.க அரசின் அவலங்களை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலைகூட பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதைச் செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தற்போது எப்எல் 2 எனப்படக்கூடிய மனமகிழ் மன்றங்களை, மதுபானக்கூடங்களை திறப்பதை நிறுத்த வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.