கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 1987-ம் ஆண்டு குடும்பத் தகராறில் அவரது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொன்று விட்டு தப்பி ஓடித் தலைமறைவானார். இந்த கொலையில் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலைகளை செய்து விட்டு தலைமறைவான முத்துச்சாமியை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை.
கொலையான அருக்காணி மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இதில் அருக்காணி கழுத்தில் அணிந்து இருந்த மஞ்சள் கயிறுடன் கூடிய ஒரு பவுன் தங்கத் தாலி மற்றும் அவர் வைத்து இருந்த 10 ரூபாய் நோட்டு போலீசாரால் பொள்ளாச்சி ஜே.எம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தங்கத் தாலி, 10 ரூபாய் நோட்டு நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து வந்தன. மேலும், முத்துசாமி கைது செய்யப்பட்டதால் நீதிமன்ற வழக்கு இதுவரை நிலுவையிலே உள்ளது. இதனிடையே ஜே.எம். 2 மெஜஸ்டிக் பிரகாசம் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள ஒரு பவுன் தங்கத் தாலி 10 ரூபாய் நோட்டு சம்பந்தப்பட்டவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த சில வாரங்களாக அருக்காணி உறவினர்களை போலீசார் தங்களது கிடைத்த தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் தேடி வந்தனர். வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவர் கொலையான அருக்காணியின் அக்காள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று அவரை நீதிமன்றத்தில் வரவழைத்து ஒரு பவுன் தங்கத் தாலி, லேசாக கிழிந்து அழுக்கு படிந்து நிலையில் இருந்து 10 ரூபாய் நோட்டை முறைப்படி போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து முத்தம்மாள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு எனது தங்கை அவரது குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். தற்பொழுது நீதிமன்றத்தில் இருந்து தங்கையின் தங்கத் தாலி பணத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறினர். அதன்படி நகை, பணத்தை வாங்கிக் கொண்டேன் என்றார்.