குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்த மருத்துவர் தணிகாசலம் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது.
நாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் அவரின் தந்தை கலியபெருமாள் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தான் ஒரு பாரம்பரிய மருத்துவம் என்றும் கடலூர் வருவாய்த்துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கோலத்தில் ஆறுதல் – 5% க்கும் குறைவானவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவை
தனது மகனின் சிகிச்சையால் யாருக்கும் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், தனது மகன் கூறிய கருத்துக்களை காவல்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தன்னை குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளை விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“