/indian-express-tamil/media/media_files/2025/09/05/ka-sengottaiyan-press-meet-2025-09-05-10-28-15.jpg)
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட உள் கட்சி மோதல் விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை எனில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு இன்றோடு முடிவடைந்தது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சிக்குள் உள்ள பிளவுகளை சரிசெய்யவும், அனைவரையும் ஒன்றிணைக்கவும் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில், அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. "புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்பதை அழுத்தமாக கூறி, அதிமுகவின் எதிர்காலப் பாதை குறித்து ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவு மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பதே என்றும், அதை நிறைவேற்றவே தான் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். அண்ணா சொன்ன "மறப்போம், மன்னிப்போம்" என்ற கொள்கையை நினைவூட்டிய அவர், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அ.தி.மு.க.வின் எதிர்காலத்தைக் குறித்து அவர் தனது கருத்துக்களைக் கூறுகையில், கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அழுத்தமாக தெரிவித்தார்.
இந்த ஒன்றிணைப்பு முயற்சிக்கு அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வரவிருக்கும் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுக மீண்டும் வலிமை பெற்று வெற்றிபெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிக்கை, கட்சிக்குள் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
செங்கோட்டையனின் இந்த பேட்டி, அதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நிறைவடைந்ததையடுத்து இதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.