Government aided school association requests to extend 7.5 Reservation and Breakfast scheme to them: தமிழ்நாடு அரசு நிதி உதவி பெறும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மேலாண்மை பள்ளிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஆர். சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு தமிழ் வழிப்பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செபாஸ்டியன், தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் தாயப்பன், இந்து பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுவாமிநாதன், இஸ்லாமிய பள்ளிகளின் சார்பாக முஸ்தபா கமால், தமிழக கத்தோலிக்க கல்விக் கழகத்தின் செயலர் ஜான் போஸ்கோ, தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டல செயலர் சோமசுந்தரம், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிரிதரன், சுரண்டையை சேர்ந்த நிர்வாகி சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: திருச்சி அம்மா மண்டப படித்துறைக்கு பூட்டு: திதி கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: -
மருத்துவக் கல்வியில் 7. 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி ஊக்கத்தொகை, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கும் சமூக நீதி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழி பள்ளிகளுக்கு ஏற்கனவே கலைஞரால் பணியிடம் வழங்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்த முதல்வரை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக தமிழ்நாடு தமிழ் வழிப்பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும் திருச்சி எஸ்.ஏ.எஸ். கல்விக்குழுமத்தின் தலைவருமான ஆ.செபாஸ்டியன் நன்றி கூறினார்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil