சிவகங்கையில் இருந்து மதுரைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்தும், மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக சென்ற டீசல் டேங்கர் லாரியும், திருமாஞ்சோலை அருகே உள்ள செம்பூர் பகுதியில் இன்று காலை நேருக்குநேர் மோதிக் கொண்டன.
அதிவேகத்தில் சென்ற டீசல் டேங்கர் லாரி, முன்னே சென்ற கேஸ் சிலிண்டர் லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் உள்ள பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பேருந்தில் இருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றினர். லாரி ஓட்டுநரின் கால்கள் வாகனத்தில் சிக்கிய நிலையில் இருந்ததால், அவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை இயல்புக்கு கொண்டு வந்தனர் மற்றும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.