பெரம்பலூர் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான வழக்கில் மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தங்கள் ஊரில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் என்ற 3 கோயில்கள் உள்ளதாகவும், இந்த கோயில்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளாக கோயில் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது என்றும் ஊரின் அனைத்து தெருக்கள் வழியாக தேர் இழுத்து வழிப்பாடு நடத்துவது வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு தேர் திருவிழாவில் முதல் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தேர் பவனி நிறுத்தப்பட்டது.
தேர் இழுத்து வழிப்பாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வருவாய் வட்டார அதிகாரி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டார்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மத ரீதியான நிகழ்வுகளின் போது வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. வழிபாடு நிகழ்வுகளின் போது பிரச்னை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த, ஒழங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் அந்த ஊர் மக்களுடன் பேசி தேர் திருவிழாவை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.