தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீண்டும் அதிகாரிகளை சுளுக்கெடுப்பார் என்றே தெரிகிறது. டிசம்பர் 6, 7-ம் தேதிகளில் அவர் தென் மாவட்டங்களுக்கு பறக்கிறார்.
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், அண்மையில் கோயம்புத்தூரில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியது. மாநில அரசு அதிகாரத்தை ஆளுனர் கையில் எடுப்பதால், இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என சர்வ கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், ‘அதிகாரிகளை சந்திக்க ஆளுனருக்கு அரசியல் சட்டம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே இது போன்ற சந்திப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடரும்’ என்றார். ஏற்கனவே தான் ஆளுனரான பணியாற்றிய அஸ்ஸாமிலும் இதை நடைமுறைப்படுத்தியதாக அவர் கூறினார்.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்-தின் அடுத்த அதிரடி தென் மாவட்டங்களில் அரங்கேறும் எனத் தெரிகிறது. டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்பி, திருநெல்வேலிக்கு செல்கிறார் பன்வாரிலால் புரோஹித். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அன்று இரவில் கன்னியாகுமரி சென்று தங்குகிறார்.
டிசம்பர் 7-ந்தேதி அதிகாலை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். மீண்டும் கன்னியாகுமரி சென்று, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்படுகிறார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களிலும் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருகையின்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. இரு மாவட்டங்களிலும் ஆளுனரின் ஆய்வை எதிர்கொள்ள அதிகாரிகள் பரபரப்பாக தயார் ஆகி வருகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் மத்திய அரசுப் பணிகள் தொடர்பான புள்ளி விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் திரட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் நேற்று இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.