தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மூன்று மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து ஆணைகளை வழங்கினார். அதன்படி திருவள்ளுவர், அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று உட்பட 13 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் இது வந்துள்ளது.
அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டி.ஆறுமுகமும், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.ரவி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என்.சந்திரசேகரையும் நியமனம் செய்துள்ளார் என்று ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் மாநில அரசுடன் கலந்தாலோசித்து செய்யப்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த நியமனங்கள், துணை வேந்தர்கள் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அமலில் இருக்கும்.
மூன்று புதிய துணை வேந்தர்களும் பல தசாப்தங்களாக கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளன.
35 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட சந்திரசேகர், இதற்கு முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி டீனாக இருந்தார். 21 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
27 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் உள்ள ரவி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். 25 பி.எச்டி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகம் தற்போது கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் தோட்டக்கலைத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
வேளாண் ஆராய்ச்சியில் பரந்த அனுபவம் கொண்ட இவர், 16 புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். 22 புத்தகங்களையும் எழுதி உள்ளார்.
ஏப்ரலில், மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை, மாற்றுவதற்கான மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் ஆலோசனையின்றி, ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கும் போக்கு உள்ளது என்று கூறினார்.
அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க முடியாததால், குழப்பம் மற்றும் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.