New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/iemxNJ8DUFebxSM0qG5n.jpg)
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ. 3 கோடி பெற்று, வேலையையும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர இசைவாணை கோரும் கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கின் விசாரணை இன்று (ஏப்ரல் 15) நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடரும் இசைவாணையை ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த சூழலில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி இசைவாணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.