தென் திருப்பதி என அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குணசீலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ரூ.22 கோடி மதிப்பில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கோவிலுக்கு வருகை தந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் யதுகிரி யதிராஜ மடத்தின் 41 வது பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ யதிராஜ நாராயண இராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் ஆளுநருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் ரவி கோவிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஶ்ரீரங்கம் கோவிலின் மினியேச்சரை பார்வையிட்டு கோவில் அர்ச்சகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த பின் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கோ பூஜையில் கலந்து கொண்டு கோமாதாவிற்கு பிரசாதம் வழங்கினார்.
பின்னர் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய "குணசீல மஹாத்மியம்" நூல் மற்றும் சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய "வள்ளுவத்தில் மெய்ஞானம்" ஆகிய நூல்களை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். திருக்குறள் ஒரு ஆன்மீகப் புத்தகம், சில அரசியல் சிந்தனையாளர்கள், திருக்குறளை ஆன்மீகத்தில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். பாரத தேசம் ஒரு ஆன்மீக தேசம், சனாதனத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என ஆளுநர் ரவி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் "குணசீல மஹாத்யம்" நூலை ஶ்ரீ ஶ்ரீ யதிராஜ நாராயண இராமானுஜ ஜீயர் வெளியிட ஆளுநர் ரவி பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து "வள்ளுவத்தில் மெய்ஞானம்" நூலை ஆளுநர் ரவி வெளியிட திருச்சி தினமலர் நாளிதழ் உரிமையாளர் ராமசுப்பு பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஶ்ரீ ஶ்ரீ யதிராஜ நாராயண இராமானுஜ ஜீயர் சுவாமிகள், கோவில் அறங்காவலர் கே.ஆர். பிச்சுமணி அய்யங்கார், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் தலைமை அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்