Coimbatore | tamilisai-soundararajan: கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்தார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், லியோ பட சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், 'விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் ஒரு சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:-
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது எனவும் ஒருவேளை வைத்திருந்தால் எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எடுத்தால் தான் பிரச்சனை வரும். காலம் காலமாக விஜயதசமி ஆயுத பூஜை என்றால் சக்தி பூஜை என அர்த்தம் என்று அரசு அதிகாரிகள் என்றால் இப்படி பேசினால் தான் இந்த அரசுக்கு பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதால் தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக இப்படி ஒரு தலைபட்சமாக நடந்து கொள்பவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நீட் தேர்ச்சியின் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் திமுக அரசு இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மறந்து இது போன்று ஒருதலை பட்சமாகவே நடந்து கொள்வது சரியில்லை. நீட் விலக்கு குறித்த முதல் கையெழுத்து எனக் கூறியது என்ன ஆனது என தெரியவில்லை.
லியோ திரைப்பட விவகாரம் பெரிதாகி வருகிறது. குறிப்பிட்ட நபர்களுக்கான நடைமுறைகளாக இருக்கக் கூடாது. எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும் அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தாலேயே இந்த பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல் சினிமாவை சினிமா என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதையே தான் கூறுகிறேன். ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. யாருக்கு உள்ளுணர்வாக வெற்றியை கொண்டாட தோன்றுகிறதோ அதை சொல்லிக் கொண்டாடட்டும் இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர். வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும் போது அதில் தவறில்லை. மற்ற மதத்தவர்கள் சொல்லும் போது அவர்களது நம்பிக்கைகளையும் குறை என சொல்ல முடியாது.
ஆதீனங்கள் காலம் காலமாக தமிழோடு ஆன்மீகத்தை வளர்த்தவர்கள் என்பதால் அவர்கள் ஒன்று சொன்னால் அரசாங்கம் அதை நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மற்ற மதங்களில் பிரச்சனைகளை சொல்லும் போது அரசாங்கம் உடனடியாக அதில் கவனத்தை செலுத்துகிறது. ஆனால் இந்து மதம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் கவனம் கொடுப்பதில்லை.
இந்தியா கூட்டணியின் மகளிர் மாநாடு சோனியா காந்தி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர்,அண்ணாதுரை ஆகியோரின் காலத்தில்தான் பெண்களுக்கான சம உரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னால் இருந்த காமராஜரை முற்றிலுமாக மறந்துள்ளார். காமராஜர் படிப்பறிவை கொடுத்ததால் தான் பெண்களுக்கு நிச்சயமான ஒரு புரிதலும் ஒரு பக்க பலமும் மேன்மையும் வந்தது. அதை மறந்தது தவறு.
சாமானிய பெண்களுக்கான மாநாடு என சொல்லிவிட்டு அதில் இருந்தவர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளாகவே இருந்தனர். தவறான அவ நம்பிக்கையை மகளிர் மத்தியில் விதைக்கிறார்கள். தான் மட்டுமல்லாது பாரதப் பிரதமரும் காமராஜரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் கருப்பு பண ஒழிப்பிற்காக என்னை பாராட்டிருப்பார் என பிரதமர் கூறியுள்ளதை நினைவு படுத்தி ஊழலற்ற முன்னேற்றத்திற்கு உதாரணமாக காமராஜரை எடுத்துக் கொள்வோம். ஆனால் காங்கிரசார் அவருக்கு என்ன மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பின்பு ஸ்டாலினிடம் காணாமல் போய்விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நான் ஒரு சாதாரண குடிமகள். அனைத்து விஷயங்களிலும் கருத்து கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு.
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. உக்ரைன் போராக இருக்கட்டும் இன்றைக்கு இஸ்ரேல் போராக இருக்கட்டும் கொரோனா காலகட்டத்திலும் நமது இந்திய அரசு பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டில் மிக பத்திரமாக இந்தியர்கள் மீட்கப்பட்டனர். பெரும் போர் சூழலில் இருந்து இந்தியர்களும் தமிழர்களும் வந்துள்ளார்கள் என்பது பிரதமருக்கு அயல் நாடுகளில் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதும் அதன் காரணமாகத்தான் இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“