தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரிப்பதற்கான உறுதியான காரணங்களை தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதி என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, நான் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என்னுடன் இதே குற்றத்துக்காக கைதான சக ஆயுள் தண்டனை கைதி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், என்னை மட்டும் இதுவரை விடுதலை செய்யவில்லை.
இதுதொடர்பான கோப்புகளுக்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்து, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், கொடுங்குற்றச்செயல் என்று கூறி,ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டார். எனவே, என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, டி.மரியஜான்சன் ஆகியோர் ஆஜராகி, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அமைச்சரவை எடுக்கும் முடிவு களுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். அதை ஆளுநரால் மீறமுடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை எதுவும் இல்லை.
எனவே, மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். அதுவரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“