பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கண்முன்னே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆசிரியரின் உயிரை காப்பாற்றினர்.
பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் கிருபானந்தம் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
அவரின் தற்கொலைக்கு காரணம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான முரளிதரன் என்பவர் ரூ 5 லட்சம் பணத்தை கடனாக வாங்கி விட்டு ஆசிரியர் கிருபானந்ததை ஆள் வைத்து மிரட்டியதாகவும், தகாத வார்த்தையில் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் கிருபானந்தம் தனது மாணவர்களிடம் இதைப்பற்றி கூறி அழுதுள்ளார்.
பின்னர், தீடீரென்று பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் அவரை காப்பாற்றினர். அவரை உடனடியாக மீட்ட ஆசிரியர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணையை தொடங்கினர்.
மோசடியில் ஈடுப்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான முரளிதரனை கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.