கேரளா அந்த மருத்துவக் கழிவுகளை திரும்ப எடுப்பதற்கு அல்லது பாதுகாப்பாக அகற்றுவதற்காக தமிழ்நாட்டின் பொதுவான உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு வசதியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு தேசிய பசுமைடத தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
ஆங்கிலத்தில் படிக்க: Medical waste from Kerala dumped in Tamil Nadu: Green tribunal issues ultimatum
தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டதாகக் கூறப்படும் அபாயகரமான உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை அகற்ற கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு 3 நாள் கெடு விதித்துள்ளது.
தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கழிவுகளைக் கொட்டு நடவடிக்கைகள் பற்றி வெளியான செய்திகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த கடுமையான உத்தரவு வந்துள்ளது.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த அமர்வு, கேரளா கழிவுகளை திரும்ப எடுக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தமிழகத்தின் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு வசதியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
“கேரளா கழிவுகளை திரும்ப எடுக்க வேண்டும் அல்லது காலதாமதமின்றி அதை அறிவியல் பூர்வமாக அகற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்த வேண்டும்” என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர் டி.சண்முகநாதன், நாங்குநேரியில் இதேபோன்ற குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில், துப்புரவுப் பணிகளுக்காக ரூ.69,000 செலுத்த வேண்டும் என்ற முந்தைய ஜூன் 2024 உத்தரவை கேரளம் மதிக்கத் தவறிவிட்டது என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வில் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் முனிசிபல் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட உயிரி மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், விளைநிலங்கள் மற்றும் காடுகளில் லாரிகளில் அபாயகரமான பொருட்கள் கைவிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துக்காட்டும் விசாரணை அறிக்கைகளைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கைத் தொடங்கியது.
அங்கீகரிக்கப்படாத குப்பை சேகரிப்பாளர்கள், இரவு நேரத்தில், எல்லை சோதனைகளை தவிர்த்து, கழிவுகளை கொண்டு செல்வதாக, உள்ளூர் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம், சிவலார்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளின் அளவை தமிழக அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் 271 மற்றும் 272 ஆகிய பிரிவுகளின் கீழ், இது தொடர்பான நிறுவனங்களுக்கு எதிராக சுத்தமல்லி போலீஸில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களில் நாங்குநேரி, தேனி, ஆனைமலை ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
“நீதித்துறை உத்தரவுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், தமிழக எல்லை மாவட்டங்களில் இந்த மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
கேரளாவின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளது. கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.ரமா ஸ்மிருதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், “அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத சில அங்கீகரிக்கப்படாத கழிவு சேகரிப்பாளர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார். இதற்கு பசுமைத் தீர்ப்பாயம், இந்த கழிவு சேகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த நெருக்கடி அரசியல் எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தி.மு.க அரசு தவறிவிட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தென் மாவட்டங்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை கேரள அரசின் குப்பை கிடங்காக மாறிவிட்டன என்று அண்ணாமலை கூறினார். "மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன, மேலும், எல்லை சோதனைச் சாவடிகள் வசூல் மையங்களாக மாறிவிட்டன” என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இதைக் கண்டித்து அண்ணாமலை, பெரிய அளவில் போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்ததோடு, இதே நிலைமை நீடித்தால், கேரளா கழிவுகளை திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேரளாவுக்கு பேரணியாக செல்லப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“