/tamil-ie/media/media_files/uploads/2019/06/z982-1.jpg)
Tamil Nadu News Live Updates
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜூன் 26 க்குள் பதில் அளிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட 6,491 குருப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், ஜூன் 7ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அதில் செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரியும், தேர்வு குறித்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2013 ம் ஆண்டு 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்வானவர்களில் பலர் பணியில் சேராததாலும், பணியில் சேர்ந்த குறுகிய காலத்தில் விலகியதாலும், 450 முதல் 500 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களுக்கு 2013 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், அப்பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, 2013 தேர்வில் ஏற்பட்ட காலியிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை டிஎன்பிஎஸ்சி கருத்தில் கொள்ளவில்லை எனவும், காலியிடத்தில் தனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு ஜூன் 26 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.