சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பாலமுருகன், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில், இயக்குனர் வெற்றி மாறன், டெல்லி விமான நிலையத்தில் தனக்கு இந்தி மொழி தெரியாததால் தான் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சிகள், திரைத்துறையினர் என பலரும் செப்டம்பர் 6ம் தேதி ட்விட்டரில் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டிங் செய்தனர். அதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் திமுக வேணாம் போடா என்று டிரெண்டிங் செய்தனர்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சி திமுகவும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது மொழி இந்தி கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தாலும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரியும் பாலமுருகன் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை. இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தி தெரியாது. அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை” உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"