/indian-express-tamil/media/media_files/2025/09/23/stalin-modi-2025-09-23-14-40-48.jpg)
GST tax reduction
நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரி விகிதக் குறைப்பு நேற்று (செப். 22) முதல் அமலுக்கு வந்ததை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பல்வேறு பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக 5%, 12%, 18% மற்றும் 28% என இருந்த நான்கு வரி அடுக்குகளும், இப்போது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அன்றாடப் பொருட்கள், மருந்துகள், சலவை சோப்புகள் போன்ற பல பொருட்களின் விலை கணிசமாகக் குறையும். இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும், இது ஒரு ‘சேமிப்புத் திருவிழா’.
மேலும், சுதேசிப் பொருட்களை வாங்கி, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வேகமளிக்கும், தொழில் செய்வது எளிதாகும். கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் ஜி.எஸ்.டி. குறைப்பு பேச்சு தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் X பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Hon'ble Prime Minister @narendramodi now says Indians will save Rs. 2.5 lakh crore through #GST reform and #IncomeTax relief. But this is exactly what the Opposition has been demanding from the very beginning. If these measures had been taken eight years ago, families across the… pic.twitter.com/NREuss2PQf
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 23, 2025
அதில் "ஜி.எஸ்.டி. குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக் குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்து தான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன் நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்" என்று ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.