சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானக் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, 20 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான கட்டுமான தளங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். சிறிய அளவிலான, அதாவது 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான கட்டிடங்களுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
குறைந்த மற்றும் நடுத்தர மதிப்புள்ள கட்டிடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவற்றை சரிசெய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த கால அவகாசத்திற்குள் விதிமீறல்கள் சரி செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கட்டுமானக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும், நகரை தூய்மையாக பராமரிக்கவும் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த புதிய அபராத விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.