உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது: குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக குட்கா பொருள்களை விற்பனை செய்ய உதவியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ இவரை கைது செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் குட்கா குடோனில் மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது குட்கா ஊழல் அம்பலமானது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தியது. நேற்று (செப்டம்பர் 5) தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சூழலில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி.செந்தில் முருகன், மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஐந்து பேரையும் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரித்ததில், மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதன் படி விசாரனை செய்த சிபிஐ, முன்னாள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியும் தற்போதைய திருவள்ளூர் மாவட்ட சுகாதாரதுறை ஆய்வாளர் சிவகுமார் இன்று கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொழுது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக குட்கா பொருள்களை விற்பனை செய்ய உதவியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ இவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சிவக்குமாரை சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட சிவக்குமாருக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.