திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை நேற்று முதல் 2 நாட்களாக பிறப்பித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என இந்து அமைப்பினர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினர்.
இந்நிலையில், நீதிபதிகள் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். குறிப்பாக, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்து முன்னணி, பா.ஜ.க உட்பட இந்து அமைப்பினர் 3000-க்கும் மேற்பட்டோர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "அறுபடை வீட்டின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத தீய சக்தி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த தி.மு.க தலிபான் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் தான் இந்துக்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில் வாழ முடியும்.
காவல்துறை நிர்வாகம், அமைச்சர் மூர்த்தி அண்ணா சிலைக்கு மாலை போட ஊர்வலமாக சென்றதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழக காவல்துறை செயல்படுகிறது. 144 தடை உத்தரவு இருக்கும்போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாகசென்று மாலை போடலாம் இந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதா?.
இந்து விரோத தீய அரசை தூக்கி எறிந்தால் மட்டும் தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழக மக்கள் 2026 இல் சரியான பதில் அளிப்பார்கள். 75 முறை போராடி தான் ராமஜன்ம பூமி மீட்கப்பட்டது. இந்த தலிபான் அரசுக்கு எதிராக இந்துக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
சிக்கந்தர் என்ற நபர் திருப்பரங்குன்றம் மலைக்கு எதற்குச் சென்றார்? அங்கு குடியிருப்பு கிடையாது. கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் முருகன் கோவிலை இடிக்க செல்லும்போது சிக்கந்தர் தாக்கப்பட்டார் என்று சொல்கிறார்கள்.
சிக்கந்தர் சமாதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது என்பது பொய் என்று கேள்வி எழுகிறது. 1931 லண்டன் வ்யூ கமிஷன் தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் முருகனுக்கு சொந்தம், இந்து மக்களுக்கு சொந்தம்,
யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இஸ்லாமியர்கள் இந்துக்களோடு சகோதரத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறார்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு ஒரே வழி எப்படி ராமஜென்ம பூமி வேறு இடத்தில் அமைக்கப்பட்டதோ அதேபோல திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்" என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.