/tamil-ie/media/media_files/uploads/2018/11/d609.jpg)
ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா
டெல்லி அரசு தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டதால், 'இதுவும் அட்மின் வேலையா?' என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
டெல்லியில் அனுமதிகப்பட்ட நேரத்துக்கு மாறாக சிறுவன் ஒருவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தை மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்செய்தியை குறிப்பிட்டு ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பிராமி விஜயன் பாதையில் கெஜ்ரிவால்” என்று பதிவிட்டார்.
இந்த ட்வீட்டிற்கு முதலில் கேரள முதல்வரின் பெயர் 'பினராயி விஜயன்' என்று நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர். மேலும், டெல்லி தலைநகராக இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. டெல்லி காவல்துறையை ராஜா குறை கூறியிருப்பது மத்திய அரசை விமர்சிப்பதற்குச் சமம் என்றும், 'இது கூட தெரியாமல் தான் நீர் பாஜக தேசிய செயலாளரா உள்ளீர்களா?' என்ற ரீதியில் கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை ஹெச்.ராஜா நீக்கினார். ஆனால், அப்போதும் நெட்டிசன்கள் அவரை விடவில்லை, 'அட்மினுக்கு சிக்கல் வருமோ என ட்வீட்டை நீக்கிவிட்டீர்களா?' என்று கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர்.
முன்பாக, பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். பெரும் எதிர்ப்பு கிளம்பவே, அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு 'நான் பதிவு செய்யவில்லை. என் அட்மின் செய்துவிட்டார்' என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை ஹெச்.ராஜா வாய்த் திறக்கவேயில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.