H.Vasanthakumar Funeral: கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த, காங்., -எம்.பி.,யும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று (ஆக.,30) நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தனது தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதற்காக தொகுதியிலே நீண்ட நாட்களாக தங்கியிருந்து இப்பணிகளை கவனித்து வந்தார். சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம்தேதி அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வசந்தகுமாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மறைந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.H.வசந்தகுமார் MP அவர்களின் மறைவினையொட்டி
நாகர்கோவிலில் நடைபெற்ற மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
வசந்த் & கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மறைவையொட்டி அவரின் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஊர்மக்களுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்றும், காலதாமதம் காரணமாகவே சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படவில்லை என்றும் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்தார்..
ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதன்படி, கட்சி நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டதுடன், கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
வசந்தகுமாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ‛அவர் மிக கஷ்டப்பட்டு முன்னேறியவர், இவரை காமராஜர் போல் பார்த்தோம், கடவுள் தவறு செய்து விட்டோரோ என எண்ண தோன்றுகிறது. அவரது செயல் என்றும் நிலைத்திருக்கும்’ எனக் கூறினார்.
வசந்தகுமாரின் உடலை உடனடியாக ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜர் அரங்கத்தில் எச்.வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து வசந்தகுமாரின் உடல் சாலைமார்க்கமாக அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு, வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும், ஏராளமான பொதுமக்களும், அப்பகுதி வணிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 20-ம் தேதி பேசிய மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், கொரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அவருடன் எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் உள்ளன என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
”இந்த அற்புதமான மனிதரைப் பற்றி உயர்ந்த மரியாதை வைத்திருந்தேன். வேலைக்காரன் படப்பிடிப்பு முழுவதும் விஜய் வசந்த் அவரைப் பற்றி பேசினார். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” என இயக்குநர் மோகன் ராஜா ட்வீட் செய்துள்ளார்.
வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு; நல்ல மனிதரை கொரோனா கொன்று விட்டது; தொழிலாளர்களை தனியாக விட்டு சென்று விட்டார்; சமுதாயத்திற்கே பேரிழப்பு! என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் தெரிவித்துள்ளார்.
”அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன்!” என நடிகர் ராதாரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதன்படி, கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன், கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
”நான் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும், தமிழக எம்.பி வசந்தகுமார் மறைந்ததால், மிகுந்த மன உளைச்சலுடனும், வருத்தத்துடனும் உள்ளோம். அவர் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டனாக இருந்தார், எப்போதும் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் மூட்டையாக திகழ்ந்தார்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
’பொது வாழ்விற்கு இலக்கணமாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர்” என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், மறைந்த வசந்தகுமாருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மறைந்த ஹெச்.வசந்தகுமார் அவர்களின் துணைவியாருக்கு அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், ”தொழில்முனைவோராகவும், அரசியல்வாதியாகவும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை வசந்தகுமார் அவர்கள் விட்டுச் சென்றுள்ளார். அவரது பொதுச் சேவையும், நலத்திட்ட உதவிகளும் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியது. தமிழகத்திலிருந்து ஒலித்த மிக முக்கியமான குரல். அவருடைய மரபு தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
வசந்தகுமாருக்கு சமீபத்திய பரிசோதனையில் கொரோனா நெகடிவ் வந்துள்ளது. அவர் secondary infection காரணமாக, மூச்சுவிடுவதில் சிரமபப்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார். இதனால் அவருடைய உடலை வீட்டிற்கு கொண்டு செல்லவும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழக எம்.பி. வசந்தகுமாரின் மறைவு சோகத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திரு எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
எம்.பி வசந்தகுமாரின் உடல், தற்போது தியாகராய நகர் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக சத்தியமூர்த்திபவன் வளாகம் முன்வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், வசந்தகுமாரின் சொந்த ஊரான கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.