Hari Nadar Paid 1 Crores 52 Lakhs Tamil News : பனங்காட்டு படைகட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான ஹரி நாடார், கழுத்திலும் கைகளிலும் கொத்து கொத்தாக நகைகள் அணிந்ததை அடுத்து வருமான வரித்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து தேர்தல் பிரசாரத்துக்கு ஆலங்குளம் செல்வதற்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றவரை மடக்கி விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்நேரமும் ஹரியின் கழுத்தில் கொத்து கொத்தாகப் போடப்பட்டிருக்கும் நகைகள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்கிற சந்தேகம் எழாதவர்கள் யாருமில்லை. அதே சந்தேகத்தில்தான் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் படையினரும் கடந்த 28-ம் தேதி காலை விமான நிலையத்தில் ஹரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரணையின்போது ஹரி அணிந்திருக்கும் அணிகலன்கள் யாவும் அசல் 916 தங்கம் என்று கூறியுள்ளார்.
விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதால் ஹரியை அனுப்பி வைத்ததோடு திருவனந்தபுரம் வருமானவரித்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர் பாதுகாப்புப் படையினர். இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குத் திருவனந்தபுரத்தில் இறங்கியதும், ஹரி நாடாரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர் வருமானவரித்துறையினர்.
ஹரியின் கழுத்திலும் கைகளிலும் அணிந்திருந்த மொத்த நகைகளையும் கழற்றி 3 கட்டமாகப் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வின் முடிவில் அனைத்தும் ஒரிஜினல் என்பது தெரியவந்தது. மொத்தமாக 3 கிலோ 450 கிராம் எடை கொண்ட நகைகளை அவர் அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவை அனைத்தும் சென்னை ஜி.ஆர்.டி, மற்றும் பீமா ஜூவல்லர்ஸில் வாங்கப்பட்டதாக அதற்கான பில்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ்வளவு நகைகள் வாங்குவதற்கான வருமானம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, தான் திரைத்துறை மற்றும் தொழில் அதிபர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்வதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த ஆண்டுக்கு இதுவரை வரி செலுத்தாது ஏன் எனக் கேட்டதற்கு, வரி செலுத்துவதற்கு மார்ச் மாதம் இறுதிவரை நேரம் இருப்பதாகக் கூறி ஹரி நாடார் சமாளித்தார்.
இந்நிலையில் வரி செலுத்தினால் நடவடிக்கை ஏதுமின்றி விடுவிப்பதாக வருமானவரித்துறையினர் கூறியதை அடுத்து தன் சென்னை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கணக்கு விவரங்களை சமர்ப்பித்த ஹரி, மொத்தம் 1 கோடியே 52 லட்சம் ரூபாயை வரியாக முன் கூட்டியே கட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்படி வருமான வரித்துறையின் பெயரில் ஒரு கோடியே 52 லட்சத்துக்கான வரிவோலை வழங்கினார் ஹரி. இதையடுத்து ஹரி நாடாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 29-ம் தேதி இரவு ஹரி நாடாரை வருமானவரித்துறையினர் விடுவித்தனர். அதே நடமாடும் நகைக்கடையைப் போலவே வெளியேவந்தார் ஹரி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"