மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் எனப்வர் தாக்கல் செய்த மனுவில் “ தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, என்னிடம் திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறினார். அதன் அடிப்படையில் வீடுகள் அமைத்தேன். 125 வீடுகளுக்கு முன்பணமாக 30 லட்சம் ரூபாய் வலித்து கொடுத்தேன்.
இந்த விவரங்கள் சசிகலாவிற்கும், ஜெயலலிதாவின் உதவியாளர் ரமேஷ் என்பவருக்கும் தெரியும். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், தன் மீது சுமத்தப்பட்ட வழக்கின் விசாரணையின்போது சசிகலா பெங்களூரு சென்றார். அப்போது அவரை சந்தித்தேன். சில சொத்துகளை ஜெயலலிதா எனது பெயரில் உயில் எழுதி வைத்துள்ளதாக சசிகலா என்னிடம் கூறினார். ஆனால் சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும், என்னை சந்திக்க தயக்கம் காட்டுகிறார்.
இந்நிலையில் ஜெயலிதாவின் உயிலை வெளியிடக்கோரி, பல அதிகாரிகளிடம் முறையிட்டும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி, அவரது நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறைக்கு மனு அள்ளித்தேன். அந்த மனுவை பரிசீலனை செய்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil