/indian-express-tamil/media/media_files/2025/09/01/swimming-pool-2025-09-01-18-17-14.jpg)
மூளையைத் தின்னும் அமீபா பரவல்: தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வுசெய்ய சுகாதாரத்துறை உத்தரவு
கேரளாவில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ (Naegleria fowleri) தொற்று அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அறிகுறிகளும் பரவும் விதமும்:
நன்னீரில் உள்ள அமீபா தொற்றால் பரவும் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அரிய வகை பாதிப்பு கேரளத்தில் அதிகரித்து உள்ளது. இந்த அமீபா மூக்கின் வழியாக சென்று மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தொற்றால் கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய அறிவுறுத்தல்கள்
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு இதுகுறித்து சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்திகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்களின் தண்ணீரை 2 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி, குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.