குட்கா வழக்கு, சிபிஐ விசாரணை, முதல்வரிடம் விளக்கம் என தொடர் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிறார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து குட்கா நிறுவன உரிமையாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், கடந்த 2 தினங்களாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், முதல்வர் பழனி சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (17.12.18) சந்தித்துப் பேசினார். அப்போது சிபிஐ விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
அதே போல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் கமிஷன் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாதது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக உள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. கஜா புயல் நிவாரணப் பணிகளில் இருந்தததால் அவர்களுக்கு நேற்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கால அவகாசம் முடிந்ததையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருத்ணன் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகவுள்ளனர்.