மே 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் கடந்த 24ம் தேதி முடிந்தது. மக்களைக் கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்ததால், வெயிலின் தாக்கம் குறையும் என்று நினைத்திருந்த மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் உள்ளது.
கத்திரி முடிந்ததால் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. மேலும் கோடையில் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று கூறப்பட்டது. தென் தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வந்தாலும், சென்னையில் வெயிலின் தாக்கம் சிறிதும் குறையவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் கடினமான சுழலைச் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில், “தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மாரை நோக்கிச் சென்று விட்டது. இதனால் காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இந்த நிலை அடுத்த 3 நாட்களுக்கு இருக்கும். இதனால் சென்னையில் அடுத்த 3 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலு இழந்து அப்படியே மறைந்துவிட்டது” என்று கூறினார்.